செய்திகள்

மோடி, ராணுவத்தை அவதூறாக பேசியதாக மம்தா மீது போலீசில் புகார்

Published On 2016-12-13 19:42 GMT   |   Update On 2016-12-13 19:42 GMT
பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு எதிராக பா.ஜ.க. ஊழியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அம்மாநில பா.ஜ.க. ஊழியர் ஒருவர் கொல்கத்தா போலீசில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.


பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவம் பற்றி மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு எதிராக மனவ் சர்மா என்பவர் மத்திய கொல்கத்தாவில் உள்ள ஜோரசங்கோ தானா காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார். உடனே இந்த புகார் கொல்கத்தா நகர கமிஷ்னருக்கு அனுப்பப்பட்டது.

அந்த புகாரில், “கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி முன்னொருபோதும் இல்லாத விதமாக இந்திய ராணுவத்தை தாக்கி பேசினார். இந்திய ராணுவத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை அவர் கூறினார்.

இந்திய ராணுவம் தன்னுடைய அரசுக்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபடுகிறது என்று குற்றம்சாட்டினார். இது பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டு செல்லும்.

கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்ட விவகாரத்தில், மோடி அரசாங்கம் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அதனால் அவர் மீது இந்த புகாரை பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News