செய்திகள்

செம்மரம் கடத்தல் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.11 கோடி டெபாசிட்

Published On 2016-12-02 07:19 GMT   |   Update On 2016-12-02 07:19 GMT
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, செம்மரம் வெட்டும் தொழில்கள் ஈடுபடும் ஜம்னாமரத்தூர் பகுதி தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.11 கோடி டெபாசிட் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பதி:

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற செம்மரக்கடத்தல் காரர்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மரம் வெட்டும் தமிழகத் தொழிலாளர்களுக்கு கூலியாக அளித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சேஷாசல வனத்தில் 50 தமிழக செம்மரக் கடத்தல் தொழிலாளர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் கூலியாக கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆந்திர போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை வனப்பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

அதல், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூரில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் மட்டும் ரூ.11 கோடி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதை டெபாசிட் செய்த அனைவரும் அப்பகுதியில் வாழும் செம்மரம் வெட்டும் தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.

இது குறித்து முழு அளவில் விசாரணை நடத்த தமிழக போலீசாரின் உதவியை ஆந்திர அதிரடிப்படை டி.ஐ.ஜி. காந்தாராவ் கோரியுள்ளார்.

Similar News