சித்தூர் அருகே செம்மரம் கடத்திய 9 பேர் கைது: 3 கார்கள் பறிமுதல்
திருப்பதி:
சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவர் பிடிபட்டார். அவரை, ஆந்திர போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், ஆந்திரா- கர்நாடகா வனப்பகுதியில் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிறப்பு படை அமைக்கப்பட்டு ஆந்திரா- கர்நாடகா வனப்பகுதியான கட்டினஹல்லியில் கடத்தல் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தனிப்படை போலீசார், கடந்த 4 நாட்களாக நடத்திய அதிரடி வேட்டையில், கடத்தல் கும்பலை சேர்ந்த 13 பேர் நேற்று பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காசி (வயது 52), வெங்கடேஸ் (23), ரமேஷ் (25), அண்ணாமலை (27), குபேந்திரன் (45), மற்றொரு ரமேஷ் (26), தட்சிணாமூர்த்தி (21), பல்லுமலை (33), ஜெய்சங்கர் (33) ஆகிய 9 தமிழர்கள் எனவும், ஆந்திராவை சேர்ந்த ஒருவரும், கர்நாடாகவை சேர்ந்த 3 பேரும் எனவும் தெரியவந்தது.
13 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான 1½ டன் செம்மரக் கட்டைகள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட செம்மரக் கடத்தல் கும்பலிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.