செய்திகள்

விசாகப்பட்டினம் கடற்கரையில் காதலர் தினம் கொண்டாட ஏற்பாடு: மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு

Published On 2016-11-05 05:24 GMT   |   Update On 2016-11-05 05:24 GMT
விசாகப்பட்டினம் கடற்கரையில் காதலர் தின பண்டிகை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நகரி:

பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்று காதலர்கள் கடற்கரை, பூங்காக்களில் ஜாலியாக கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பாசிட் டிவ் குளோபல் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் விசாகப்பட்டினம் கடற்கரையில் காதலர் தின பண்டிகை கொண்டாட முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து 9 ஆயிரம் காதல் ஜோடிகளை வரவழைக்க முடிவு செய்து இருக்கிறது.

அவர்கள் நீச்சல் உடையில் கடற்கரையில் நடனமாட செய்து காதலர் தினம் கொண்டாடப்படும் என கூறி உள்ளது.

இதற்கு மகளிர் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

காதலர் தின பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அவர்கள் கூறும்போது, பெண்களை நீச்சல் உடையில் நடனமாட வைத்து கொண்டாடி நமது பண்பாட்டை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.

ஏற்கனவே மேலைநாட்டு கலாச்சாரம் பரவி வருகிறது. இதனால் காதலர் தின பண்டிகைக்கு அரசு அனுமதி கொடுக்க கூடாது என்றார்.

இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Similar News