செய்திகள்
3 நாள் பயணமாக இலங்கை பிரதமர் ரனில் இந்தியா வந்தார்
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
புதுடெல்லி:
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவர் இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல், சார்க் மாநாடு புறக்கணிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர். இதை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) நடக்க உள்ள இந்திய பொருளாதார மாநாட்டில் ரனில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
ரனில் தன்னுடைய இந்திய பயணத்தின் போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, தர்மேந்திர பிரதான் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார். ரனிலுடன் அவருடைய மனைவி மைத்ரி மற்றும் இலங்கை மந்திரிகள், அதிகாரிகள் குழுவினரும் இந்தியா வந்துள்ளனர்.