செய்திகள்

மிகப்பெரிய சதி திட்டத்தை சட்டசபையில் அம்பலப்படுத்துவேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2016-09-28 05:09 GMT   |   Update On 2016-09-28 05:09 GMT
ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு போடுவதற்கு பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சதி திட்டம் என்ன என்பதை சட்டமன்றத்தில் அம்பலப்படுத்துவேன் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து இதுபற்றி விவாதிப்பதற்காகவும், ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது அடுத்தடுத்து வழக்கு போடுவது தொடர்பாக விவாதிப்பதற்காகவும் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

என் மீதும், அமைச்சர்கள் மீதும், மற்றும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்கு போடுவதற்கு பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த சதி திட்டம் என்ன என்பதை நான் சட்டமன்றத்தில் அம்பலப்படுத்துவேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கெஜ்ரிவால் இது சம்மந்தமாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும் தகவல் வெளியிட்டிருந்தார். அப்போது என்மீதும், கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதும் போடப்படும் அனைத்து வழக்குகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பின்னணியில் இருக்கிறார் என்று கூறியிருந்தார். எனவே சட்டசபை கூட்டத்தில் இதுபற்றி அவர் விபரமாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News