செய்திகள்

பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

Published On 2016-09-26 10:22 GMT   |   Update On 2016-09-26 10:22 GMT
பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி:

பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய் சங்கர், நீர்வளத் துறை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

உரி தீவிரவாத தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தத்தினை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்றுள்ள கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் ஆதரவு கொடுக்க தயார் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில துணை முதல்-மந்திரி நிர்மல் சிங் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960ல் ஏற்பட்டதாகும். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கையொப்பமிட்டது.

Similar News