செய்திகள்

29 வருட நேர்மைக்குக் கிடைத்த பரிசு: செக்யூரிட்டியிலிருந்து ஆபீசராக உயர்ந்த ஏர் இந்தியா ஊழியர்

Published On 2016-08-16 12:34 GMT   |   Update On 2016-08-16 12:34 GMT
நேர்மையாகப் பணியாற்றிய செக்யூரிட்டிக்கு ஏர் இந்தியா நிறுவனம் பதவி உயர்வு வழங்கிக் கவுரவித்துள்ளது.

புது டெல்லி:

ஏர் இந்தியா நிறுவனத்தில் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சுபாஷ் சந்தர் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்து வருகிறார்.

ஒவ்வொரு முறை பயணம் முடிந்து இந்தியா திரும்பும் விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் விமானத்தை சோதனை செய்யும் பணி சந்தருடையது.

அவ்வாறு சோதனை செய்யும்போது ஏதேனும் விலையுயர்ந்த பொருட்களை பயணிகள் தவறவிட்டு சென்றிருந்தால், அதனை சம்பந்தப்பட்ட பயணியிடமே நேர்மையாக ஒப்படைத்து விடுவது சந்தரின் வழக்கம்.

கடந்த ஜூன் மாதத்தில் ஹாங்காங் சென்று திரும்பிய விமானத்தில் 5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கொண்ட பையைக் கண்டெடுத்த சந்தர் அதனை உரியவரிடமே ஒப்படைத்து விட்டார்.

இதுபோல 2003 -ம் வருடத்தில் பயணி ஒருவர் விட்டுச்சென்ற தங்க நகைகளையும் சந்தர் உரியவரிடமே ஒப்படைத்து விட்டார்.

இதுபோல பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தரின் நேர்மையைக் கண்ட உயர் அதிகாரிகள், சுதந்திர தினமான நேற்று அவரை ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியுயர்த்திக் கவுரவித்துள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனம் இதுபோன்று நேர்மையானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவிப்பது இதுவே முதல் முறையாகும்.

Similar News