கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற 17 வயது சிறுமி- கணவர் மீது வழக்கு
- டாக்டர்கள் விசாரித்தபோது சிறுமிக்கு 17 வயதே ஆவது தெரிய வந்தது. மேலும் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.
- சிறுமியின் கணவர் முருகன் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்
சென்னை:
கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுமதி. இவர்களது மகளான 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
அதன்பிறகு இருவரும் அதே பகுதியில் தனியே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் 25-ந்தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிரசவத்துக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் விசாரித்தபோது சிறுமிக்கு 17 வயதே ஆவது தெரிய வந்தது. மேலும் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.
இதுபற்றி திருமங்கலம் மகளிர் போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சிறுமிக்கு 16 வயதாக இருக்கும்போது திருமணம் செய்து வைத்ததும், தற்போது குழந்தை பிறந்திருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் சிறுமியின் கணவர் முருகன் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பதிவு செய்தனர். மேலும் இருவரின் பெற்றோரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதையறிந்த முருகன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.