உள்ளூர் செய்திகள்
மதுரவாயலில் கிணற்றை காணவில்லை என்று புகார்- போலீசார் விசாரணை
- மதுரவாயல் மார்க்கெட் பின்புறம் உள்ள பாரதியார் தெருவில் பழைய கிணறு ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது.
- மாயமாகி போன கிணற்றை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போரூர்:
மதுரவாயல் மார்க்கெட் பின்புறம் உள்ள பாரதியார் தெருவில் பழைய கிணறு ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது. இந்த கிணறு கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்களால் மாயமானது.
இந்த நிலையில் சினிமா படத்தில் வரும் காட்சிபோல் நடிகர் வடிவேலு பட பாணியில் கிணற்றை காணவில்லை என்று அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவேந்திரன் மதுரவாயல் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மதுரவாயல் மார்க்கெட் பின்புறம் உள்ள பாரதியார் தெருவில் வட்டம் 144-ல் சர்வே எண் 113/ஏ, 114/ஏ, 114ஏ /2ஏ-வில் 70ஆண்டுகள் பழமையான கிணறு ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது.
ஆனால் அந்த கிணற்றை தற்போது காணவில்லை. மாயமாகி போன கிணற்றை கண்டுபிடித்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.