உள்ளூர் செய்திகள்

கல்லணையில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

Published On 2023-08-12 10:05 GMT   |   Update On 2023-08-12 10:05 GMT
  • தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • தஞ்சை மாவட்டத்தில் கல்லணை மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்

தஞ்சாவூர்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசன சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து 16-ந் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்குகளை மிஞ்சி சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. இந்தநிலையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தடையின்றி வழங்குவது தொடர்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் நேற்று தஞ்சை மாவட்டத்தில் கல்லணை மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர், தஞ்சை, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டங்களில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி முடிவடைந்துள்ளது.குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆய்வின்போது கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கண்ணன், உதவி பொறியாளர்கள் சேந்தன், சூரிய பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News