டீ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
- 2 பேர் கைது
- ரூ.500 மற்றும் கத்தி பறிமுதல்
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 51).மார்க்கெட் பகுதியில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று மாலை கோட்டை பின்புறம் உள்ள டவுன் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை முள்ளிபாளையத்தை சேர்ந்த உதயா (23) காகிதப்பட்டறையை சேர்ந்த ஆகாஷ்( 18 )ஆகியோர் வழிமறித்தனர். இருவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி முனியப்பனிடமிருந்து ரூ.500-ஐ பறித்தனர்.
இது குறித்து முனியப்பன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த உதயா, ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.500 மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் கோட்டை சுற்றுச்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.