சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி முதல்-அமைச்சரிடம் மனு
- சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தனர்
- திருச்சி கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொலை
திருச்சி
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பெல் பகுதியை சோ்ந்தவர் வித்யா லட்சுமி. இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வந்தார். கடந்த மே மாதம் 12-ந்தேதி மாலை 6 மணியளவில் இவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர், அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து 3 பேர் சென்றனர். இதில் ஒருவர் வித்யா லட்சுமி அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்துள்ளார்.
மற்றொரு வாலிபர் அவரது கையை இழுத்து பிடித்து கொண்டார். 3-வது நபர் விஷம் கலந்த குளிர்பானத்தை அவருடைய வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் சாந்தி (45) கொடுத்த புகாரின் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் மாணவி வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இன்று திருச்சி வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மாணவி வித்யா லட்சுமி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் ம.அய்யப்பன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சங்கர் மற்றும் மாணவி வித்யா லெட்சுமியின் குடும்பத்தினர் மனு அளித்து முறையிட்டனர்.