உள்ளூர் செய்திகள்

சாலையில் குப்பை கொட்டினால் அபராதம்-மாநகராட்சி மேயர் எச்சரிக்கை

Published On 2022-07-17 09:39 GMT   |   Update On 2022-07-17 09:39 GMT
  • திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்
  • திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அந்தப் பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது

திருச்சி:

திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற நிர்வாகம் கடும் பிரயாசித்தம் செய்து வருகிறது. குப்பைகள் கொட்டுவதற்கு வசதியாக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. புதிய வாகனங்களும் வாங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

இருந்த போதிலும் திறந்த வெளியில், சாலையோரங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவது பொதுமக்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதனை தடுப்பதற்கு பெண் தூய்மை பணியாளர்கள் மூலம் பல இடங்களில் கோலமிட்டும் பார்த்தனர். இருப்பினும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை.

இதற்கிடையே பொது இடங்களில் குப்பை கொட்டி செல்பவர்களை அடையாளம் காண்பதிலும் சிரமம் உள்ளது.

ஆகவே பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அந்தப் பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது பற்றி மாநகராட்சி மேயர் மு அன்பழகனிடம் இன்று கேட்டபோது கூறியதாவது:-

திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமானது. பொறுப்பற்ற முறையில் சிலர் குப்பைகளை பொது இடங்களில் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே இதனை தடுப்பதற்கு அதிகம் குப்பை கொட்டப்படும் இடங்களில் ஒரு மாதத்திற்குள் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்.

தடையை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அவர்கள் கொட்டும் குப்பை மற்றும் கழிவுகளை பொறுத்து ரூ.5000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படும். திருச்சி மாநகராட்சியில் சக்கரம் பொருத்திய 100 குப்பை தொட்டிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட இருக்கிறது என்றார்.

Tags:    

Similar News