துறையூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் அடிப்படை வசதிகள் - நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- துறையூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் சாலையினை புதுப்பிக்க வேண்டும்
- நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகளை நீக்க வேண்டும்.
திருச்சி :
துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் துறையூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் சாலையினை புதுப்பிப்பது, தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் துறையூர் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சிறப்பு உறைவிட கட்டிடத்திற்கு கூடுதல் அடிப்படை வசதிகளை அமைப்பது, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகளை நீக்குவது, சாமிநாதன் நகரில் 31 லட்ச ரூபாய் செலவில் பூங்கா அமைப்பது உள்ளிட்ட 35 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் 30 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐந்து தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், சுமதி மதியழகன், பாலமுருகவேல், சரோஜா இளங்கோவன், உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.