உள்ளூர் செய்திகள்

கம்போடியா நாட்டில் தவிக்கும் மகனை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மனு

Published On 2022-08-08 09:50 GMT   |   Update On 2022-08-08 09:50 GMT
  • மனு கொடுத்த பெண்ணின் 2-வது மகன் மகேஷ் என்பவர் கம்போடியா நாட்டில் பணியாற்றி வருகிறார்.
  • மேலும் ரூ. 2½ லட்சம் தந்தால் என் மகனை அழைத்து வருவதாக ஏஜெண்டுகள் கூறி உள்ளனர்.

நெல்லை:

பாளை அருகே உள்ள மூலக்கரைப்பட்டி காரியாண்டியை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி சிதம்பரவடிவு (வயது52). இவர் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் 2-வது மகன் மகேஷ் என்பவர் கம்போடியா நாட்டில் பணியாற்றி வருகிறார். அந்த வேலைக்காக நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் எங்களிடம் ரூ. 5 லட்சம் பெற்று கொண்டனர்.

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி என கூறிய அவர்கள் மகேசை கம்போடியாவில் உள்ள சட்டவிரோத கும்பலிடம் வேலைக்கு சேர்த்துவிட்டனர்.

இதையறிந்த எனது மகன் தன்னை மீட்குமாறு எங்களிடம் போனில் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நாகர்கோவிலை சேர்ந்த ஏஜென்டிடம் விபரம் கேட்டோம்.

அதற்கு அவர்கள் மேலும் ரூ. 2½ லட்சம் தந்தால் உங்கள் மகனை அழைத்து வருவதாக தெரிவித்தனர். அதன்பேரில் ரூ. 1 ½ லட்சம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதனை வாங்கி கொண்டு மேலும் ரூ. 2 லட்சம் தந்தால்தான் அழைத்து வருவோம் என்கின்றனர்.

எனவே எங்கள் மகனை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும். மேலும் நாகர்கோவில் ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி வாங்கி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News