உள்ளூர் செய்திகள்

திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2023-07-11 06:50 GMT   |   Update On 2023-07-11 06:50 GMT
  • திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

திருப்பூர்:

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாடியில் வாலிபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததை பார்த்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஒருவர் சத்தம் போட்டார்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து, அந்த நபரை தேட ஆரம்பித்தனர்.

அப்போது அந்த நபர் அங்கிருந்த ஒவ்வொரு வீட்டு மாடியிலும் குதித்து தப்பி சென்றார். பொதுமக்கள் சத்தம் போட்டபடி அவரை விரட்டி சென்றனர்.

அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு குதிக்கும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் மதுரையை சேர்ந்த மதன் (வயது 25) என்பதும், திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நண்பரின் அறையில் தங்கியிருந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இரவு நண்பர்களுடன் மது அருந்த சென்று விட்டு திரும்பிய அவர், போதையில் ஒவ்வொரு வீட்டின் மாடி வழியாக சென்றதும், பொது மக்கள் திருடனாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வாலிபரை விரட்டியுள்ளனர். விரட்டும் போது மதன் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடன் என நினைத்து பொதுமக்கள் விரட்டிய போது வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News