உள்ளூர் செய்திகள்

சென்னை கோட்டை அருகே சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

Published On 2022-08-06 09:45 GMT   |   Update On 2022-08-06 09:45 GMT
  • நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
  • மெரினா காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் சிவானந்தா சாலை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.

சென்னை:

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன. கோட்டையில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதையொட்டி இன்று சுதந்திர தின விழா அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. சுதந்திர தின ஒத்திகையையொட்டி கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மெரினா காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் சிவானந்தா சாலை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.

இதே போன்று பாரிமுனை ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலையை நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி பாலம் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன. கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை நோக்கி சென்ற வாகனங்களும் முத்துசாமி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு இருந்தன.

பாதுகாப்பு ஒத்திகையையொட்டி கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்றது போன்ற பாதுகாப்பு ஒத்திகை வருகிற 11 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து அந்த 2 நாட்களிலும் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட உள்ளன.

Tags:    

Similar News