உள்ளூர் செய்திகள்

சூளைமேட்டில் நடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொலை செய்த கணவன் கைது

Published On 2022-08-12 07:09 GMT   |   Update On 2022-08-12 07:09 GMT
  • பழனி, பாரதி இருவரும் சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • கார் டிரைவராக வேலை செய்து வந்த பழனி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

சென்னை:

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பாரதி அதே பகுதியில் டீ கடையில் வேலை செய்து வந்தார். இவரது நடத்தையில் பழனிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் பாரதி மீதான சந்தேகம் பழனிக்கு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பழனி நேற்று பாரதி வேலை செய்யும் டீ கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். கடையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று மனைவியிடம் பழனி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆவேசமடைந்த பழனி, மனைவி பாரதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாரதி உயிரிழந்தார்.

இருவரும் சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கார் டிரைவராக வேலை செய்து வந்த பழனி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பாரதி வேலை செய்த கடையின் 3-வது மாடியில் வைத்து மனைவியை அவர் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

Tags:    

Similar News