உள்ளூர் செய்திகள்
காதல் ஜோடி பார்த்தசாரதி- அந்தோணி சுமிதா.

காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு- கடத்தல் புகார் கூறி காதலியை கரம் பிடித்த என்ஜினீயர்

Published On 2022-11-04 06:52 GMT   |   Update On 2022-11-04 06:52 GMT
  • அந்தோணி சுமிதாவை உவரி அருகே கூடுதாழையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
  • தகவலை காதலன் பார்த்தசாரதிக்கு அந்தோணி சுமிதா போன் மூலம் தெரிவித்துள்ளார்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பஞ்சல் பெருமணலை சேர்ந்தவர் போஸ்கோ. இவரது மகள் அந்தோணி சுமிதா (வயது 24). சாப்ட்வேர் என்ஜினீயர். சேலம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பார்த்தசாரதி (29) சாப்ட்வேர் என்ஜினீயர்.

இவர்கள் இருவரும் சென்னையில் ஐ.டி.கம்பெனியில் பணியாற்றிய போது காதலித்து வந்துள்ளனர். தற்போது பார்த்தசாரதி மும்பையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தோணி சுமிதா தனது ஆதார்கார்டு முகவரியையும் மும்பையில் உள்ள தனது காதலன் வீட்டு முகவரிக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் அந்தோணி சுமிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

மேலும் அந்தோணி சுமிதாவை உவரி அருகே கூடுதாழையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை காதலன் பார்த்தசாரதிக்கு அந்தோணி சுமிதா போன் மூலம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து பார்த்தசாரதி உவரி போலீசில் புகார் செய்தார். அதில், கடத்தி வைக்கப்பட்டுள்ள தனது காதலியை மீட்டு தரும்படி புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா சப் -இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்தோணி சுமிதா மற்றும் சுமிதாவின் பெற்றோரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்தோணி சுமிதா தனது காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததால் அவரை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News