ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்- கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்
- ஐகோர்ட்டு உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும்.
- அமல்படுத்த முடியவில்லை என்றால் அப்பீல் செய்ய வேண்டும்.
சென்னை:
ஐகோர்ட்டு உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டு தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட்டு உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்த முடியவில்லை என்றால் அப்பீல் செய்ய வேண்டும். இதன் மூலம் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் என்று ஒரு வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, ஐகோர்ட்டு உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார் என்று அந்த கடித நகலை தாக்கல் செய்தார். இதை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.