பள்ளி மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
- காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மொத்தம் 261 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சமச்சீராக முன்னேற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில், பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மொத்தம் 261 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் முகமது லெப்பை, செயற்குழு உறுப்பினர் லெப்பை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செய்யது அகமது வரவேற்று பேசினார்.
விழாவில் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சமச்சீராக முன்னேற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். மாணவர்களுக்கு 11 வகையான நலத்திட்ட உதவிகளை அரசு செய்து வருகிறது. இப்பகுதி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே அரசு விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தங்கள் ஊருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்து முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் நன்றி கூறினார். விழாவில் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், நகராட்சி தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, வார்டு கவுன்சிலர்கள் அஜ்வாது, ரங்கநாதன் சுகு, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.