(கோப்பு படம்)
ரேசன் கடைகளுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன- இந்திய உணவு கழகம் தகவல்
- தமிழக அரசு 40 சதவிகித உணவு பொருட்களை கொள்முதல் செய்கிறது.
- போதுமான அளவு அரிசி, கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேவூரில் உள்ள இந்திய உணவு கழக கிடங்கில் மண்டல மேலாளர் ரத்தன் சிங் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தற்போது சேவூர் கிடங்கில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், 6052 மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளன. தமிழக அரசு இந்திய உணவு கழகத்திடம் இருந்து 40 சதவிகித உணவு பொருட்களை கொள்முதல் செய்கிறது.
இந்திய உணவு கழகம் மூலம் வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளது. சேவூரில் உள்ள இந்த கிடங்கின் மூலம் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 15,17,788 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வினியோகிக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் பிரதமரின் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த கிடங்கில் இருந்து 5,93,306 மெட்ரிக் டன் அரிசியும் 34,975 மெட்ரிக் டன் கோதுமையும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.