உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

Published On 2022-10-12 04:32 GMT   |   Update On 2022-10-12 04:32 GMT
  • மேல்மலை பகுதிக்கு பெரியகுளம் மற்றும் கொடைரோட்டில் இருந்து 2 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
  • கடந்த சில மாதங்களாகவே 2 தனியார்பஸ்களும் முறையாக இயக்கப்படாததால் அப்பகுதிமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மேல்மலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் விவசாயிகளே உள்ளனர். தற்போதுதான் தங்களது குழந்தைகளை கல்வி கற்க அனுப்பி வருகின்றனர். மேல்மலை பகுதிக்கு பெரியகுளத்தில் இருந்து காலை 4.10 மணிக்கு புறப்படும் தனியார் பஸ் 8.45 மணிக்கு கவுஞ்சி வருகிறது.

அதேபோல் அதிகாலை 7.45 க்கு கொடைரோட்டில் புறப்படும் மற்றொரு தனியார் பஸ் 1.45 மணிக்கு கவுஞ்சி வருகிறது. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஆஸ்பத்திரி செல்லும் பணியாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே 2 தனியார்பஸ்களும் முறையாக இயக்கப்படுவதில்லை.

இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நீண்டநேரம் பஸ்சுக்காக காத்திருந்து நடந்து செல்லும் அவல நிலையே உள்ளது. இதுகுறித்து பஸ் உரிமையாளர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையாக இயக்கப்படாத தனியார் பஸ்சுக்கு பதிலாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னவனூர், கவுஞ்சி, கும்பூர், கீழானவயல், பூண்டி, போலூர், கிளாவரை பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் விவசாயிகளும் காய்கறிகளை அதிகாலை நேரங்களில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவிட்டு ஊர்திரும்பும் போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரசு பஸ்கள் இயக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News