நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் 4,665 வழக்குகள் விசாரணை
- இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடைபெற்றது.
- நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத சுமார் 2000 வங்கி கடன் வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நெல்லை:
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் சட்டப் பணிகள் ஆணை குழுக்களால் 25 பேர் கொண்ட அமர்வுகளுடன் இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குமரகுரு தலைமையில் நடைபெற்றது.
இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன் மற்றும் நீதிபதிகள் பன்னீர்செல்வம், தீபா, குமரேசன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடியக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 665 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதேபோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத சுமார் 2000 வங்கி கடன் வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு விபத்து வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரணமாக காசோலைகளும் வழங்கப்பட்டது.