பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலயம்
- பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
- சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கரூர் :
கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பணிகள் தொடங்குவதற்காக முதற்கட்டமாக கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதினார்கள். பின்னர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் நந்தகுமார், அறநிலையத்துறை அதிகாரி விவேக், நகராட்சி கவுன்சிலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.