2-வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் கைது
- 2-வது மனைவியை கொன்று கிணற்றில் புதைத்த கணவர் கைது செய்யப்பட்டார்
- நடத்தையில் சந்தேப்பட்டு கொலை செய்தேன்
கரூர்:
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள பள்ளசங்கனூரை சேர்ந்தவர் தனபால் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேனகா (24). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவரை இழந்த மனைவியின் அக்கா அம்பிகாவை (30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தனபால் 2வதாக திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி தாய்வீட்டில் இருந்து அம்பிகாவை தனபால் அழைத்து சென்றுள்ளார். அதன்பின் இருவரையும் காணவில்லை.
இதையடுத்து வெள்ளியணை போலீசில் அம்பிகாவின் தாய் காளியம்மாள் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், தனபால் வெள்ளியணை தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் சித்ராவிடம் சரணடைந்து, நடத்தையில் சந்தேப்பட்டு அம்பிகாவை அடித்து கொலை செய்து உடலை தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் புதைத்துவிட்டேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து வெள்ளியணை போலீசார் தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.