வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு
- வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது
- விவசாயிகள் கவலை
கரூர் :
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை கரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடி விவசாயிகள் செய்தனர்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் சீசன் காலமாகும். இதனால் கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து கடந்த ஒரு வார காலமாக அதிகரித்துள்ளது. இதனால் முருங்கைக்காய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதுகுறித்து முருங்கை வியாபாரிகள் கூறும்போது,
அரவக்குறிச்சி வட்டாரத்தில் செடி முருங்கை, மர முருங்கை மற்றும் கொடி முருங்கை என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது சீசன் காலத்தை ஒட்டி முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. செடி முருங்கை, கொடி முருங்கை 2 அடி முதல் 3 அடி வரை வளரும். இந்த ரகங்கள் கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ கொண்ட ஒரு கட்டு முருங்கைக்காய் 100 ரூபாய் வரை விற்றது.
தற்போது 75 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆனால் தற்போது செடி முருங்கை காய் ரகம் ஒரு கட்டு ரூ.45 க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்கிறது. மேலும் வரும் ஜூலை 17 ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷம் குறைவாக இருக்கும். இந்த நிலையில் வரத்து அதிகரிப்பால் சுபவிசேஷங்கள் இல்லாததாலும் முருங்கைக்காய் மேலும் விலை குறைய வாய்ப்பு உண்டு இவ்வாறு அவர்கள் கூறினர்