உள்ளூர் செய்திகள்

குளித்தலையில் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கவுன்சிலர்கள் கோட்டாட்சியரிடம் மனு

Published On 2022-08-11 10:00 GMT   |   Update On 2022-08-11 10:00 GMT
  • குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பாசன வாய்க்கால்கள் செல்லும் வாய்க்கால்களை ஆக்கிரமித்தும் கட்டிடங்கள் கட்டியிருப்பதாக புகார்கள் கூறப்பட்டன.
  • மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி கழிவு நீருடன் கலந்து தேங்கி நின்று பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாக கூறப்படுகிறது.

கரூர் :

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள், மற்றும் 24 வார்டு பகுதிகளிலும் கடை முன்பாக ஆக்கிரமிப்புகளும், பாசன வாய்க்கால்கள் செல்லும் வாய்க்கால்களை ஆக்கிரமித்தும் கட்டிடங்கள் கட்டியிருப்பதாக புகார்கள் கூறப்பட்டன.

மேலும் இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி கழிவு நீருடன் கலந்து தேங்கிநின்று பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாக குற்றம் சாட்டி குளித்தலை நகர் மன்றத்தில் உள்ள 22 ஒட்டுமொத்த தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முடிவு செய்தனர்.

அதன்படி குளித்தலை பகுதி மக்களின் நலன் காத்திடும் வகையில் நகரப் பகுதியில் உள்ள 13 பாசன வாய்க்கால்கள், சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அகற்றி நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து குளித்தலை நகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர், தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்தனர். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூறியதால் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். குளித்தலை நகராட்சியில் உள்ள ஒட்டு மொத்த தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கக் கூறியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News