உள்ளூர் செய்திகள்
கருங்கல் பஸ் நிலையத்தில் பால் பூத்தை உடைத்து பணம் கொள்ளை
- கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி உள்ள கைரேகைகளை ஆய்வு செய்தனர்.
- கருங்கல் போலீசார் பணம் திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழியை சேர்ந்தவர் குளோறி (வயது 46). இவர் கருங்கல் பஸ் நிலையத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றார்.
நேற்று இரவு இவர் வியாபாரம் முடிந்து தனது கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலையில் அவர் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
கடையினுள் சென்று பார்த்த போது அங்கு அவர் வைத்துவிட்டு சென்றிருந்த பணம் திருட்டு போயிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர் இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்தார்.
இப்புகாரின்பேரில் கருங்கல் போலீசார் ஆவின்பால் விற்பனை நிலைய பூட்டை உடைத்து பணம் திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி உள்ள கைரேகைகளை ஆய்வு செய்தனர்.