உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-05-29 06:46 GMT   |   Update On 2023-05-29 06:46 GMT
  • வீடு புகுந்து 4 பேர் கும்பல் வெறிச்செயல்
  • ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

நேற்று இரவு அரவிந்த் தனது வீட்டில் இருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அரவிந்தை சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும் சரமாரியாக வெட்டினர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பலத்த காயம் அடைந்த அரவிந்த், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அரவிந்துக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடன் பிரச்சனை இருந்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் தான் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News