திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
- ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
- அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
செம்பட்டி:
திண்டுக்கல் அருகே ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் நின்ற நிலையில் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு திருவிழா எடுத்து வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகள் கொரோனாவுக்கு பிறகு இவ்வருட 54-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பக்தர்கள், அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்றனர்.
அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக பித்தளைப்பட்டி பிரிவு, செம்பட்டி-வத்தலக்குண்டு சாலை வழியாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
அதன்பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை செய்து தரிசனம் செய்தனர். இன்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.