உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீர்காழி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

Published On 2022-11-14 00:45 GMT   |   Update On 2022-11-14 00:45 GMT
  • வடசென்னைப் பகுதிகளில் நேற்று முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
  • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார்.

சீர்காழி:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சீர்காழி குட்டி தீவு போல மாறியுள்ளது.

சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழி சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் புகுந்தது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இன்று சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News