உள்ளூர் செய்திகள்

வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள்.

வடமதுரையில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய மகளிர் போலீசார்

Published On 2022-10-07 07:29 GMT   |   Update On 2022-10-07 07:29 GMT
  • வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றிய பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
  • மாவட்ட எஸ்.பி உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துர்க்காதேவி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து காவலருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் நித்யா. இவரது கணவர் விவேக். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நித்யாவிற்கு போலீஸ் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்த பெண் காவலர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி மகளிர் போலீஸ் நிலையத்தை வீடுபோல் அலங்காரம் செய்து ேதாரணங்கள் கட்டி விதவிதமான உணவுகள் தயார் செய்தனர். நித்யாவிற்கு கைநிறைய வளையல்கள் அணிவித்து மாலையிட்டு வளைகாப்பு சம்பிரதாயங்கள் செய்தனர்.

அதனைதொடர்ந்து அவரது கணவரையும் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துர்க்காதேவி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து காவலர் நித்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் , வளைகாப்பு என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத சந்தோசமான தருணமாகும். ஆனால் போலீஸ் துறை போன்ற இடைவிடாத பணிகளில் உள்ள பெண்களுக்கு இதுபோன்ற சந்தோசத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது என்பது இயலாத காரியமாக உள்ளது.

எனவேதான் எங்களுடன் பணிபுரியும் நித்யாவிற்கு இந்த குறை ஏற்படக்கூடாது என்பதற்காக போலீஸ் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தினோம். இதனால் அவரும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்என்றனர்.

நிகழ்ச்சியில் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் உள்பட அனைத்து போலீசாரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News