உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி.

கொடைக்கானலில் பதுங்கி இருந்த காதலனை போராடி மணமுடித்த சென்னை இளம்பெண்

Published On 2023-11-28 07:35 GMT   |   Update On 2023-11-28 07:35 GMT
  • உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கொடைக்கானல்:

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது 20). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டலத்தைச் சேர்ந்த சஜின்ராஜ் (27) என்பவரும் பணியாற்றி வந்தார்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சஜின்ராஜூம், காதலிப்பதாக கூறி இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலைவாணி கேட்டபோது, சஜின்ராஜ் மறுத்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனையடுத்து தனது காதலனுக்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த கலைவாணி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சஜின்ராஜை தேடி வந்தனர்.

சஜின்ராஜின் செல்போன் அவ்வப்போது ஆன் செய்து பின்னர் அணைத்து வைக்கப்பட்டது. இதனை வைத்து ஆய்வு செய்ததில் சஜின்ராஜ் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது உறுதியானது. மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை கொடைக்கானலில் திருமணம் செய்யவும் தயாராகி வந்தது கலைவாணிக்கு தெரிந்தது.

இதனையடுத்து சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்த கலைவாணி அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த சஜின்ராஜை கையும் களவுமாக பிடித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். மேலும் அவர் அங்கிருந்து தப்பித்து விடாமல் இருக்க கொடைக்கானல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரிடமும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதமா என கேட்டனர்.

இதனிடையே கலைவாணியை தானே திருமணம் செய்து கொள்வதாக சஜின்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலேயே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். அவர்களை போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சென்னையில் ஏமாற்றிய காதலனை கொடைக்கானலில் தேடி கண்டுபிடித்து இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News