வாலிபரை கொன்று ஆற்றில் வீசிய வழக்கில் 7 பேர் கைது
- பாலகுருவிடம் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து பாலகுரு, கார்த்திகேயன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள கம்பர் நத்தம் அக்கரை நெடுந்தரை அருகே நெய்வாசல் வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணத்தை விட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.
இதையடுத்து அந்த வாலிபர் உடலை அம்மாபேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இறந்து கிடந்தவர் யார் ? அவரை கொலை செய்து ஆற்றில் வீசியது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அருகே உள்ள திருமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23 ) என்பதும், அவரை திருமலைசமுத்திரம் அருகே 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி ஆற்றில் வீசியதும், உடல் அம்மாபேட்டை அருகே கரை ஒதுங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு வல்லம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து வல்லம் போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல் அய்யாசாமி பட்டி பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவரது மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டிற்கு சென்று பாலகுருவிடம் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அப்போது பாலகுருவுக்கும் சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் சக்திவேலை தீர்த்து கட்ட பாலகுரு முடிவு செய்தார்.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (45), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்த்திகேயன் ( 35), சிவகங்கையை சேர்ந்த சந்தோஷ் ராஜா (39) உள்பட ஆறு பேருடன் சேர்ந்து திருமலை சமுத்திரம் அருகே உள்ள ஒரு இடத்தில் சக்திவேலை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுரு, கார்த்திகேயன் உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.