உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே மாணவர் உள்பட 6 பேர் தற்கொலை

Published On 2022-08-09 04:41 GMT   |   Update On 2022-08-09 04:41 GMT
  • தேனி அருகே வெவ்வேறு பிரச்சினைகளில் மாணவர் உள்பட 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகில் உள்ள கப்பிபட்டி மேற்குகாலனியை சேர்ந்த தங்கம் மகன் முத்தமிழன்(20). 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன்பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை அவரது தாயார் புஷ்பம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழன் அரளிவிதையை அரைத்துகுடித்து தற்கொலை செய்து கொண்டார். ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்டமனூர் வடக்குதெருவை சேர்ந்தவர் சமயணன்(65). மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. சம்பவத்தன்று வயிற்றுவலி தாங்கமுடியாமல் அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கம்பம் அருகில் உள்ள சாமாண்டிபுரம் கன்னிமார்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(55). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகில் உள்ள செங்குளத்துப்பட்டி பால்வாடி தெருவை சேர்ந்தவர் சரவணன். (36)இவருக்கு கடந்த வருடம் ஏற்பட்ட சாலைவிபத்தின்போது கிட்னி பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சரவணன் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி அருகில் உள்ள கருவேலன்நாயக்கன்பட்டி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(23). இவர் சொந்தமாக பிக்அப் வாகனம் வைத்து டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சரிவர வேலை கிடைக்காததால் மனமுைடந்த அருண்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னமனூர் அருகில் உள்ள கே.கே.குளத்தை சேர்ந்த போஸ்காளை மனைவி முத்துலட்சுமி(62). இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்தகொதிப்பு இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த முத்துலட்சுமி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News