திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிய 13 டன் ரேசன் அரிசி பறிமுதல் 4 பேர் கைது
- ரேசன் அரிசி பதுக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 13 டன் ரேசன் அரிசி மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, சரக்கு வாகனம் உள்பட 6 வானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சின்னாளபட்டி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி, ஏட்டு ராஜசேகர் அடங்கிய குழுவினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் அரிசி மூடைகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.
இதில் சின்னாளபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது27) என்பவர் வீட்டில் பதுக்கி கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. அங்கிருந்த 13 டன் ரேசன் அரிசி மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, சரக்கு வாகனம் உள்பட 6 வானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசி கடத்திய சதீஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த லோடுமேன்கள் முருகபவனத்தை சேர்ந்த சிங்கராஜ் (36), பெரியபள்ளப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (42), எரியோட்டை சேர்ந்த ராஜா (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரேசன் அரிசியை யாரிடம் இருந்து பெற்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.