உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் அருகே மர்ம கும்பல் மிரட்டல்- பெட்ரோல் பங்க் அதிபர் தீக்குளிக்க முயற்சி
கல்பாக்கம் அருகே மர்ம கும்பல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெட்ரோல் பங்க் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் நரேந்திரன். அவரது பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள இடம் தொடர்பாக காரில் வந்த மர்மநபர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் நரேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து மீட்டனர். இதற்கிடையே அங்கிருந்த மர்ம கும்பல் தங்களது காரை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். சதுரங்கபட்டினம் போலீசார் காரை பறிமுதல் செய்து மிரட்டல் விடுத்த மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.