உள்ளூர் செய்திகள்
உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

Published On 2022-05-25 11:20 GMT   |   Update On 2022-05-25 11:20 GMT
வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தும்பேரி கூட்டு சாலையில் அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு, வணிகம் செய்து வருவதால் ஆந்திராமாநிலத்திற்கு பிரதான போக்குவரத்து சாலையாக உள்ள கூட்டு சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பள்ளி வாகனங்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதனால் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கடந்த 2018ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் பல்வேறு துறைகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர். 

ஆக்கிரமிப்பு அகற்ற பல முறை நோட்டீஸ் மட்டும் நெடுஞ்சாலை துறையினர் வழங்கி உள்ளனர். ஆனால் இது வரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தும்பேரி கூட்டு சாலையில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாசில்தார் சம்பத் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட போலீசாரிடம் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News