உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

2 மகன்களுடன் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்- கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டை

Published On 2022-05-25 09:39 GMT   |   Update On 2022-05-25 09:39 GMT
திருப்பூரில் 8 வீடுகளில் அடுத்தடுத்து தங்கி இருந்ததும், கோபால் ஒவ்வொரு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் என 6 பெயர்களை பயன்படுத்தி உள்ளார்.
திருப்பூர்:

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் குடவாசலை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முத்துமாரி (வயது 38). இவர்களுக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன்கள் தரணிஷ் (9), நித்திஷ் (6). கணேசன் குடும்பத்துடன் திருவாரூரில் தங்கி இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணேசன் முத்துமாரியை பிரிந்து சென்று, திருச்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

முத்துமாரி தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு வேலை தேடி திருப்பூருக்கு வந்துள்ளார். திருப்பூர் எஸ்.ஆர்.நகர் பகுதியில் மகன்களுடன் தங்கி இருந்த முத்துமாரி அந்த பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த கோபால் என்பவருடன் முத்துமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் கோபால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்களுடன் சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.

இந்தநிலையில்தான் கோபால், முத்துமாரி மற்றும் அவரது 2 மகன்களை கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். கோபால் திருப்பூரில் 8 வீடுகளில் அடுத்தடுத்து தங்கி இருந்ததும், அவர் ஒவ்வொரு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் என 6 பெயர்களை பயன்படுத்தி உள்ளார்.

கோபால் போலீசார் பிடியில் சிக்கினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படையினர் கோபாலின் நண்பர்கள் யார் யார் என்று விசாரித்து வருகின்றனர். மற்றொரு தனிப்படை அவர் யார் யாருடன் இதுவரை பேசினார் என ஆய்வு செய்து வருகிறார்கள். மற்ற 2 தனிப்படை குஜராத் செல்ல முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News