உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டினம் அருகே காரில் கடத்திய 675 கிலோ குட்கா பறிமுதல்- மைசூரை சேர்ந்த 2 பேர் கைது
காவேரிப்பட்டினம் அருகே காரில் குட்கா கடத்திய மைசூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம், மே.24-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகேயுள்ள கரகூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவேரிப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு நின்றிருந்த காரை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட போதைபொருள் இருந்தது தெரிய வந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த ஜுனைத்பாட்சா, நிகில் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்த ப்பட்ட விசாரணையில் ஆணைக்கல்லில் இருந்து சேலத்துக்கு இந்த போதைப்பொருளை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டனர். மொத்தம் 675 கிலோ குட்கா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து பர்கூர் டி.எஸ்.பி. மனோகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இவர்களிடம் போதைப்பொருளை கொடுத்து அனுப்பியது யார் ? இந்த கடத்தலில் பெரியபுள்ளிகளுக்கு தொடர்புகள் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.