உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெக்னாமலை கிராமத்தில் வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் சாலை அமைக்கப்படும் - கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்

Published On 2022-05-24 10:52 GMT   |   Update On 2022-05-24 10:52 GMT
நெக்னாமலை கிராமத்தில் வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் சாலை அமைக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி:

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெக்னாமலை கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பெங்களூரில் ஓட்டல் நடத்தி வந்த உரிமையாளர் ஒருவர் மரணமடைந்தார். அவரது உடலை நேற்று சுமார் 8 கி.மீ. தூரம் டோலி கட்டி நெக்னா மலைக்கு தூக்கி சென்று அடக்கம் செய்தனர். 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால்  கிராம மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வனத்துறை அனுமதி கிடைத்தஉடன் நெக்னா மலைக்கு சாலை அமைக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெக்னாமலை கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 மலை கிராமத்திற்கு கொத்த கோட்டை ஊராட்சியில் உள்ள வேப்பம்பட்டான் வட்டம் முதல் நெக்னா மலை கிராமம் வரையில் உள்ள மொத்த தூரம் 4.40 கிலோமீட்டர் ஆகும். இதில் முதல் 1.6 கிலோ மீட்டர் தூரம் வருவாய் துறைக்கு சொந்தமானது. 

இந்தப் பகுதிக்கு சாலை அமைத்து தர கடந்த 22.3. 22 அன்று மாவட்ட வனத்துறை அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் அலுவலர்களுடன் சென்று புல தணிக்கை செய்யப்பட்டது. 

இதில் வனத்துறைக்கு சொந்தமான 2.80 கிலோ மீட்டர் தூரம் நீளம் உள்ள பாதைக்கு தடையில்லா சான்று பெற சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திற்கு முன்மொழிவு கடிதங்கள் 13.4.2022 ல் முதன்மை வனப்பாதுகாவலர் சென்னைக்கு, ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது.

இதற்கு உரிய அனுமதி ஆணை வனத்துறையினரிடம் இருந்து வர பெற்றதும் உடனடியாக சாலை வசதி செய்து தரப்படும், இந்தப் பகுதிக்கு சாலை அமைக்க கடந்த 3 மாதமாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அறிக்கையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News