உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்
ஜல்லிக்கட்டுக்கு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரரர்கள் விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தகவல்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் அரசாணை பெற்று நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டுகளில் அச்சிடப்பட்ட டோக்கன் மூலம் காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைனில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் , மாடுபிடி வீரர்களுக்கும் தனித்தனியாக உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன் பதிவு செய்யும் முறை நடப்பாண்டுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் காளைகளை தழுவக்கூடிய மாடுபிடி வீரரர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் ஆன்லைன் முறையில் முன் பதிவு செய்ய வேண்டும்.
28.5.2022 அன்று திருச்சுழி தாலுகா என்.பள்ளபட்டி கிராமத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிகட்டு நிகழ்விற்கு காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரரர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் விவரங்களை விருதுநகர் மாவட்ட தேசிய தகவலியல் மைய இணைய தளத்தில்(virudhunagar.nic.in)24.5.2022மற்றும்25.5.2022 ஆகிய 2 நாட்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
சரியான விவரங்களை விடுபாடின்றி பூர்த்தி செய்யப்பட்டிருப்பதோடு முறைப்படி ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பின் தங்களது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து 26.5.2022 மற்றும் 27.5.2022 ஆகிய 2 நாட்கள் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் தங்களது ஆன்லைன்; அனுமதிச் சீட்டினை இ-சேவை மையங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜல்லிகட்டு நிகழ்விற்கு இணையதள முன் பதிவு அங்கீகரிக்கப்பட்ட அனுமதி சீட்டு பெற்ற காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.