உள்ளூர் செய்திகள்
மரணம்

வரதட்சணைக்காக மனைவியை கொன்று கணவர் நாடகம்? போலீசார் விசாரணை

Published On 2022-05-21 05:28 GMT   |   Update On 2022-05-21 05:28 GMT
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி தகராறு செய்ததாகவும் தெரிகிறது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அத்திக்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி உமாராணி (37). இவர்களுக்கு பாலகிருஷ்ணன் (14), நிஷா (12) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி தகராறு செய்ததாகவும் தெரிகிறது.

நேற்று இரவு உமா ராணி தனது வீட்டு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து கண்ணன் தனது மனைவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் போலீசாருக்கு தெரியாமல் மனைவியின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

ரெயில்வே தண்டவாளத்துக்கு அருகில் இருந்ததால் ரெயில்வே போலீசார் விசாரிப்பதா? அல்லது வடமதுரை போலீசார் விசாரிப்பதா? என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த உமா ராணியின் பெற்றோர் தனது மகள் எப்போதும் நைட்டி அணியமாட்டார். சேலை மட்டுமே அணிவார். ஆனால் அவர் நைட்டி அணிந்த நிலையில் இறந்து கிடந்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவரை கொலை செய்து விட்டு தண்டவாளம் அருகே வீசிச் சென்று இருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் உமா ராணிஅடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News