உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

Published On 2022-05-20 09:20 GMT   |   Update On 2022-05-20 09:20 GMT
ஜெயங்கொண்டத்தில் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலியானார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஸ்வேதா, (வயது 19) நிவேதா (17) என 2  மகள்கள் உள்ளனர். 

மூத்த மகள் ஸ்வேதா கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவரது கிராமத்தில் நடக்கும் தேர் திருவிழாவிற்காக தன்னுடன் கல்லூரியில் படிக்கும் தோழி மதுபாலாவை (19) அழைத்து கொண்டு கிராமத்திற்கு வந்துள்ளார். 

பின்னர் ஸ்வேதா அவரது தங்கை நிவேதா மற்றும் தோழி மதுபாலா ஆகிய மூவரும் உடையார்பாளையம் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள பகுதியில் மருதாணி இலை பறிக்க சென்றனர். பின்னர் பெரிய ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். 

குளிப்பதற்காக ஸ்வேதா அவரது தங்கை நிவேதா மற்றும் தோழி மது பாலா மூவரும் கை கோர்த்த நிலையில் ஏரியில் இறங்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக மூவரும் வழுக்கி ஏரியில் விழுந்துள்ளனர். 

இதில் மதுபாலாவும் நிவேதாவும் ஏரியின் கரைக்கு திரும்ப சுவேதா மட்டும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் சத்தம் போட்டுள்ளனர். 

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அங்கு வந்து தண்ணீரில் தத்தளித்த ஸ்வேதாவை மீட்டு  சிகிச்சைக்காக உடையார்பாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் ஏற்கனவே சுவேதா இறந்து விட்டதாக கூறினர். 

இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News