உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் :
தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், செந்துறை, திருமானூர் ஒன்றியங்களில் உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 22 இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில், தற்போது 4 இடங்களில் மட்டுமே மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது.
இது அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.நீர்வள துறை அதிகாரிகள் உடனடியாக இடங்களை ஆய்வு செய்து மணல் அள்ள இடம் தேர்வு செய்து மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரியை உடனடியாக தமிழகத்தில் திறக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களை ஒன்று திரட்டி நீர்வளத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் தெரிவித்தார்.
அதன்படி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நீலமேகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு ஆர்.மணிவேல், எம்.வெங்கடாசலம், எ.கந்தசாமி, ஜே ராதாகிருஷ்ணன், கு.அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு மாட்டுவண்டி மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்துகாந்தி பூங்காவில் இருந்து கோஷம் எழுப்பியவாறு ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.