உள்ளூர் செய்திகள்
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாறைக்குழியில் வாலிபர் உடல் மிதப்பதை படத்–தில் காணலாம்.

திருப்பூர் அருகே வாலிபரின் கை, கால்களை கட்டி பாறைகுழியில் வீசிசென்ற கும்பல் - போலீசார் விசாரணை

Published On 2022-05-17 09:40 GMT   |   Update On 2022-05-17 09:40 GMT
தண்ணீரில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 30 வயது மதிக்க தக்க ஆண் உடல் மிதப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மங்கலம்:

மங்கலம் அருகே கை, கால்களை கட்டி வாலிபரை கொன்று உடலை பாறைக்குழியில் வீசி சென்ற கொலையாளிளை போலீசார் தேடி வருகிறார்கள். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவருக்கு சொந்தமான பாறைக்குழி கொத்துமுட்டி பாளையம் பகுதியில் உள்ளது. இந்த பாறைக்குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலை–யில் 30 வயது மதிக்க தக்க ஆண் உடல் மிதப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றி செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கொலையாளிகள் அந்த வாலிபரை வேறு எங்கோ வைத்து கை, கால்களை கட்டி கொலை செய்து உடலை பாறைக்குழியில் வீசி இருக்கலாம். அல்–லது அந்த வாலிபரை பாறைக்குழிக்கு கடத்தி வந்து அவரை கை,கால்களை கட்டி அடித்து கொன்று பிணத்தை பாறைக்குழியில் வீசி இருக்கலாம் என்று போலீ–சார் கருதுகிறார்கள். எனவே முதலில் கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் முயச்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரை அடையாளம் கண்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும். 

எனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மற்றும் மங்கலம் பகுதியில் யாராவது காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார்பதிவாகி உள்ளதா? அல்லது பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பி வராமல் உள்ளாரா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் இச்சிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News