உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பயணி தாக்கி கண்டக்டர் பலி - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-05-14 10:38 GMT   |   Update On 2022-05-14 10:38 GMT
மதுராந்தகம் அருகே பயணி தாக்கி உயிரிழந்த கண்டக்டர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் இன்று அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை விழுப்புரம் பணிமனையை சேர்ந்த டிரைவர் குணசேகரன் ஓட்டினார். கண்டக்டராக பெருமாள் (56) என்பவர் இருந்தார். அதிகாலை 3:30 மணிக்கு மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணி ஒருவர் ஏறினார்.

இவரிடம் கண்டக்டர் பெருமாள் டிக்கெட் வாங்குமாறு வலியுறுத்தியுள்ளார். பயணி அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் டிக்கெட் எடுக்க மறுத்தார். அத்துடன் கண்டக்டர் பெருமாளுடன் தகராறு செய்தார். இதனால் கண்டக்டர் பெருமாளுக்கும் பயணிக்கும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.

மதுபோதையில் இருந்த பயணி கண்டக்டர் பெருமாளை அடித்துள்ளார். இதனால் பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் மது போதையில் இருந்த பயணியை மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். மேல்மருவத்தூர் நோக்கி பஸ் சென்றபோது கண்டக்டர் பெருமாள் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு பஸ்சில் சரிந்து விழுந்துள்ளார்.

உடனடியாக மேல்மருவத்தூர் பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. கண்டக்டர் பெருமாள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகளை பஸ் டிரைவர் குணசேகரன் மாற்று பஸ் மூலம் பயணிகளை அனுப்பி வைத்தார். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் கண்டக்டரை தாக்கியது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கண்டக்டர் பெருமாள் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், பயணி தாக்கி உயிரிழந்த கண்டக்டர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News