உள்ளூர் செய்திகள்
அரசு அலுவலக சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்
விதிமீறலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஓவியங்கள், பொதுமக்களை ஈர்த்து வருகிறது.
உடுமலை:
உடுமலை நகரில் முக்கிய வீதிகளில்அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான சுவர்கள், கட்டிடங்கள் எப்போதும் சினிமா, விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சி விளம்பரங்கள் என அலங்கோலமாக காட்சியளிப்பது வழக்கம்.
சுவற்றில் விளம்பரம் செய்யாதீர்கள் எனஎச்சரித்து வாசகம் இருந்தாலும் அதனை சிலர் கண்டுகொள்வதில்லை. அதற்கு மாறாக விதிமீறி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதேநேரம்சில அரசுப்பள்ளிகளின் சுவர்கள், வனத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் ஓவியங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில்தற்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சுவரும் இணைந்துள்ளது.
போதையில் வாகனம் ஓட்டாதீர்', வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர் 'ெஹல்மெட் அணிவீர்' சீட் பெல்ட் கட்டாயம்' உள்ளிட்ட விதிமீறலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஓவியங்கள், பொதுமக்களை ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:
இவ்வழித்தடத்தில், அரசு அலுவலகங்கள்மட்டுமின்றி கல்லூரிக்கு சென்று திரும்பும் மாணவர்கள் ஏராளம். அப்போது பலரும் சுவரில் உள்ள விழிப்புணர்வு ஓவியங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். அதன் வாயிலாக மனமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அவ்வழியாக செல்லும் மக்கள் பலரும் இத்தகைய செயலுக்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர் என்றனர்.